الْحَمْدُ لِلّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِم يَعْدِلُونَ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர். (அல்குர்ஆன் 6:1)

வெள்ளி, 4 டிசம்பர், 2009

உளு செய்யும் முறை

1. நிய்யத்து வைப்பது- (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் உளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதெல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)2. உளு செய்யுமுன் பிஸ்மி சொல்வது- (உளு செய்யும் போது) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு உளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவூத்)3. மிஸ்வாக் செய்து கொள்வது- என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு உளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்) 4. இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது- உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் உளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் உளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)5. வாய்க்கும், நாசிக்கும் தண்ணீர் செலுத்துவது- நபி(ஸல்) அவர்களின் உளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை எடுத்து (உளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒரு அள்ளு தண்ணீரால் வாயை கொப்பளித்து நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
- நீர் உளு செய்தால் வாயை கொப்பளித்துக் கொள் என்பதாக லகீத் இப்னு ஸுப்ரா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத், பைஹகி)
- உங்களில் ஒருவர் உளு செய்தால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி பின் சீறிக் (சிந்திக்) கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
நோன்பு இல்லாத நேரத்தில் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் வாய் கொப்பளிப்பதையும் அதிகப்படுத்தியே செய்ய வேண்டும்.
வலது கையினால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி (சிந்தி) விடுவதே நபி வழியாகும்.
- அலி(ரலி) அவர்கள் உளு செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து (உளு செய்தார்கள்) பின்பு நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி (சிந்தி) விட்டு இதுதான் நபி(ஸல்) அவர்கள் செய்த உளு என்றார்கள். (ஆதாரம் - அஹ்மத், நஸாயி)
- அலி (ரலி) அவர்கள் உளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் நாசியை சீறி (சிந்தி) விட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த உளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் - தாரமி)
6. முகத்தை கழுவுதல். (முகம் கழுவக்கூடிய அளவு, நீளத்தால் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழிவரைக்கும், அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரைக்கும்)
- விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹு செய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்) (அல்குர்ஆன் 5:6)
- உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் உளு இருந்ததாக கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்) 7. தாடியை குடைந்து கழுவுவது- நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை குடைந்து கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)- நபி (ஸல்) அவர்கள் உளு செய்தால் தண்ணீரில் ஒரு அள்ளை எடுத்து நாடிக்கு கீழாலே நுழைத்து தன் தாடியை குடைந்து கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத், ஹாகிம், பைஹகி)8. இரு கைகளையும் முழங்கை உட்பட கழுகுவதுமுகத்தை கழுகுவதற்கு சொன்ன குர்ஆனுடைய வசனமே இதற்கும் ஆதாரம்.
- உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் உளு இருந்ததாக கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) 9. விரல்களை குடைந்து கழுகுவது- நீர் உளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். (ஆதாரம்:- அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா)
- நபி (ஸல்) அவர்கள் உளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்) சின்னி (சின்ன) விரலைக் கொண்டு குடைந்து கழுவுவார்கள். (ஆதாரம்:- திர்மிதி, இப்னு மாஜா, அபூதாவூத்)
10. மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவது (தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹு செய்ய வேண்டும்)- ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து உளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்) என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் எல்லை கடந்து தவறிழைத்த அநியாயக்காரராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஸ்லிம்)
நபியவர்கள் ஒரு தடவை, இரண்டு தடவை கழுவியும் உளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.
11. வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது- நீங்கள் ஆடை அணிந்தாலும், உளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:- அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)
12. உளு செய்யும் உறுப்புக்களை தேய்த்துக் கழுவுவது- உறுப்புக்களை தேய்த்து உளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து உளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத், இப்னு ஹிப்பான், அபூ தாவூதுத்தயாலிஸி)
13. தலையையும், காதையும் மஸ்ஹு செய்வது (தடவுவது)- தலையை மஸ்ஹு செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிழைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பாகை அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பாகை அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பாகை இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபி வழியல்ல.
ஆனால் தலைப்பாகை அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.
- நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹு செய்தார்கள், (அதாவது) தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடரி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
14. இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்வது. காதை மஸ்ஹு செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உள்பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)
- நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதுகளின் உள்பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.
- இன்னும் ஒரு அறிவிப்பில் - தலையையும், இரு காதைகளையும் ஒரு தடவை மஸ்ஹு செய்தார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)
15. இரண்டு கால்களையும் விரல் நுணியிலிருந்து கரண்டைக்கால் வரை கழுவுவது.
(உளுவின் ஆயத்தே இதற்கும் ஆதாரம்)
- கால்களை கழுவும் போது கரண்டைக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் குடைந்து கொள்ள வேண்டும்.- ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் உளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
16. உளு செய்யும் உறுப்புக்களை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக கழுவுவது.
17. உளு செய்யப்படும் உறுப்புக்களை மேலே கூறப்பட்ட முறைப்படியாக (ஒன்றன் பின் ஒன்றாக) செய்வது.
18. முகம், கை, கால்களை கழுவும் போது அவசியமாக கழுவ வேண்டிய பகுதியை விட அதிகமாக்கி கழுகுவது சிறந்தது.
- உளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம், கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட) அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தன் இரு கைகளையும் முழங்கையை விடவும் அதிகமாக்கி கழுவினார்கள், இரு கால்களையும் கழுவும் போது கரண்டைக்காலை விடவும் அதிகமாக்கி கெண்டைக்கால் வரையும் கழுவினார்கள், ஏன் இப்படிக் கழுவுகின்றீர்கள்? என நான் கேட்டேன் அதற்கு இது (மறுமையில்) ஆபரணம் அணியப்படும் இடம் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தாக அபூ ஸுர்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம் - அஹ்மத்)19. தண்ணீரில் வீண் விரயம் செய்யக்கூடாது.- நபி (ஸல்) அவர்கள் நான்கு அல்லது ஐந்து முறை இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீரின் அளவைக்கொண்டு குளித்திருக்கின்றார்கள், இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீரின் அளவைக்கொண்டு உளு செய்திருக்கின்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)20. ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது சில குறிப்பிட்ட துஆக்கள் ஓதுவதற்கு சரியான ஆதாரமில்லை.21. உளு செய்த பின் ஓதும் துஆ.- உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் உளு செய்துவிட்டு பின்பு
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்- முஸ்லிம்)
யார் உளு செய்து முடிந்ததும்
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِـحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيِكَ
என்று ஓதுகின்றாரோ அதை ஒரு துண்டில் எழுதப்பட்டு அதில் முத்திரையிடப்படும், மறுமை நாள் வரைக்கும் அது உடைக்கப்படமாட்டாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - தப்ராணி, அமலுல் யஃமி வல்லைலா லிஇப்னிஸ்ஸுன்னி)

உளுவை முறிக்கும் காரியங்கள்
1. முன் பின் துவாரத்தினால் ஏதாவது வெளியாகுதல்.அதாவது மலம், ஜலம், பின் துவாரத்திலிருந்து காற்று மற்றும் மணி, மதி, வதி இவைகள் வெளியாகுவது உளுவை முறிக்கும்.உங்களில் ஒருவர் சிறு தொடக்காகி விட்டால் அவர் உளு செய்யும் வரைக்கும் அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
நீங்கள் குளிக்கக் கடமைப்பட்டோராக இருந்தால் குளித்துப் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள், இன்னும் நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மலஜலம் கழிக்கச் சென்று வந்திருந்தாலும், அல்லது நீங்கள் பெண்களை (உடலுறவின் மூலமும்) தீண்டியிருந்தாலும் அப்பொழுது (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை நீங்கள் பெறாவிடில் பரிசுத்தமான மண்ணை நாடுங்கள், பின்னர் அதிலிருந்து உங்களுடைய முகங்களையும், உங்களது கைகளையும் தடவி (தயம்மும் செய்து)க் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:6)உங்கள் ஒருவரின் வயிற்றில் குழப்பம் ஏற்பட்டு வயிற்றிலிருந்து ஏதாவது வெளியானதா? இல்லையா? என சந்தேகித்தால் (வயிற்றிலிருந்து வெளியாகிய காற்றின்) சத்தத்தை கேட்காமலோ அல்லது வாடையை நுகராமலோ பள்ளியை விட்டும் வெளியாக வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) மணி என்பது:- இந்திரியம், இது ஆசையோடு வெளியானால் குளிப்பு கடமையாகும், உளுவும் முறிந்துவிடும். ஆசையில்லாமல் நோயின் காரணத்தினால் வெளியானால் குளிப்பு கடமையாகாது உளு செய்வது அவசியம்.வதி என்பது:- சிறுநீர் கழித்த பின் வெளியாகும் கனமான வெள்ளை நிறமுள்ள நீர், இது அசுத்தமான நீர், இந்நீர் படும் இடத்தை கழுவ வேண்டும்.
வதி வெளியாவதினால் ஆண் உறுப்பையும் அதன் பகுதியையும் கழுவிக்கொண்டு தொழுகைக்கு உளு செய்வதைப்போல் உளு செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - பைஹகி)மதி என்பது:- காம உணர்வுகள் ஏற்படும் போது, கணவன் மனைவி உறவின் போது வெளியாகும் வழுவழுப்பான நீர், இந்த நீர் வெளியாகும் போது சில நேரம் மனிதன் அதை உணராமல் இருக்கலாம், இதுவும் அசுத்தமான நீர்தான், இந்நீர் படும் இடத்தையும் கழுவ வேண்டும்.நான் அதிகம் மதி வெளியாகும் மனிதனாக இருந்தேன், நபி (ஸல்) அவர்களின் மகளை நான் திருமணம் முடித்திருந்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்களிடம் இதைப்பற்றி கேட்க வெட்கப்பட்டேன், இதனால் இன்னும் ஒருவரிடம் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கும் படி கூறினேன், அவர் நபி (ஸல்) அவர்களிடம் (அதைப்பற்றி) கேட்டார், உளு செய்து உமது ஆண் உறுப்பை கழுவிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி)2. ஆழ்ந்த தூக்கம்.நபித்தோழர்கள் இஷாத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக தங்களின் தலை சாயும் அளவுக்கு தூங்கிக்கொண்டிருப்பார்கள், பின்பு உளு செய்யாமலே தொழவும் செய்வார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)
ஆழ்ந்த நிலையில் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு தூங்குவதினால் உளு முறியாது, சாய்ந்த நிலையில் ஆழ்ந்து தூங்கினால் உளு முறிந்து விடும்.3. புத்தி நீங்குவது.
அதாவது பைத்தியம், மயக்கம், போதை போன்ற காரணங்களால் புத்தி நீங்குவதினால் உளு முறியும்.4. அபத்தை திரையின்றி இச்சையின் காரணமாக தொட்டால்.தன் ஆண் உறுப்பை யார் தொடுகின்றாரோ அவர் உளு செய்யாமல் தொழக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - திர்மதி)ஒரு ஆண் தன் அபத்தை தொடுவதினால் அவருடைய உளு முறிந்து விடுமா? என ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார், அது அவருடைய உடம்பிலுள்ள மற்ற உறுப்பகளைப் போன்ற ஒரு உறுப்புத்தான், அதனால் அவருடைய உளு முறியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத், திர்மிதி)அதாவது அபத்தை தொடுவதினால் உளு முறியும் என்று சொல்லக்கூடிய ஹதீஸுக்கு இச்சையோடு தொடும்போது என்றும், அபத்தை தொடுவதினால் உளு முறியாது என்று வரக்கூடிய ஹதீஸுக்கு இச்சையில்லாமல் தெரியாமல் படும்போது என்றும் விளங்கிக் கொள்ளலாம்.
5. ஒட்டக இறைச்சி சாப்பிடுவது.ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நாங்கள் உளு செய்ய வேண்டுமா? என ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார், நீங்கள் விரும்பினால் உளு செய்து கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் உளு செய்யத் தேவையில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒட்டகை இறைச்சி சாப்பிட்டால் உளு செய்ய வேண்டுமா? என அம்மனிதர் கேட்டார், ஆம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத், அபூதாவூத்)அன்னிய பெண்ணின் உடலில் படுதலினால் உளு முறியாது- நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது ஆயிஷா (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள், முத்தமிடுவதினால் நோன்பும் முறியாது, உளுவும் முறியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)
- நபி (ஸல்) அவர்கள், அவர்களின் சில மனைவியரை முத்தமிட்டுவிட்டு உளு செய்யாமலேயே தொழச் சென்றார்கள். (அஹ்மத், திர்மிதி)
- நபி (ஸல்) அவர்கள் தொழும் பக்கம் நான் தூங்கிக் கொண்டிருப்பேன், அவர்கள் சுஜுது செய்ய நாடினால் என் காலை சுரண்டுவார்கள் நான் என் காலை மடக்கிக் கொள்வேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
- ஒரு இரவு நபி (ஸல்) அவர்களை அவர்களின் படுக்கை விரிப்பில் நான் காணவில்லை. அவர்களை நான் தேடினேன் (அவர்கள் பள்ளியில் சுஜுது செய்து கொண்டிருந்ததினால்) அவர்களின் இரு கால் பாதங்களும் நாட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர்களின் இரு கால் பாதங்களில் என் கை பட்டது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
இதே போல் சூரத்துல் மாயிதாவின் ஆறாவது ஆயத்தில் பெண்ணைத் தொட்டு தண்ணீர் இல்லையென்றால் தயம்மும் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆயத்தின் கருத்து, பெண்ணோடு உடலுறவு கொண்டு தண்ணீர் இல்லையென்றால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்பதாகும், இங்கே தொட்டால் என்பதின் கருத்து உடலுறவு என்பதுதான், வெறும் தொடுதல் என்பதல்ல. பெண்ணை தொட்டால் உளு முறியாது என்பதினால் அன்னிய பெண்ணை தொடலாம் என்பதல்ல. தெரியாமல் ஒரு அன்னிய பெண்ணின் உடம்பில் ஒரு அன்னிய ஆணின் உடல் பட்டுவிட்டால் உளு முறியாது. அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

நன்றி:இஸ்லாம்கல்வி.கம்

புகையும் நுரையீரல்கள்

நீங்கள் உங்களையே கொலை செய்துக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
இஸ்லாத்தில் தற்கொலை செய்துக் கொள்வது நிரந்தர நரகத்தைத் தேடித்தரும் பாவம் என்பதை அனைவரும் அறிந்ததே. இன்று விஷம் சாப்பிட்டு நாளை இறந்து போனாலும் அதை தற்கொலையாகவே நாம் கருதுவோம். அதே போல மெதுவாக கொல்லக்கூடிய விஷம் (Slow poision) சாப்பிட்டு வாரம், வருடம், 10 வருடம் அல்லது 30 வருடம் சென்று இறந்து போனாலும் நாம் இதை தற்கொலையாகவே கருதுவோம். சிகரெட் புகைப்பதால் மனிதன் தன் வாழ்நாளை மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொள்கின்றான் என்பது விஞ்ஞானத்தில் நிறூபிக்கப்பட்ட உண்மை.
ஆனால் நின்று கொல்லக் கூடிய சிகரெட், இஸ்லாமிய சமுதாயத்திலும் மற்றவர்களிடமும் புத்துணர்வு ஊட்டும் மருந்தாக கருதப்படுவதுதான் விந்தையிலும் விந்தை. எனவே மனித சமுதாயத்தில் குறைந்தது ஒரு நபரையாவது இக்கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
சிலர்களது கருத்து சிகரெட் புகைப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்பதும் வேலையின் பளு தெரியாமல் இருக்கும் என்பதும் வேலையை உற்சாகமாக செய்ய உதவும் என்பதாகும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இது ஒரு நவீனக் கலாச்சாரம் என நினைக்கிறார்கள். ஒரு சிகரெட் பலர் பகிர்ந்து தங்கள் சகோதரத்துவத்தை(?!) வெளிப்படுத்துகிறார்கள். பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறார்களோ இல்லையோ சிகரெட் தேவைப்படுபவனுக்கு தாராளமாக பாக்கெட்டை நீட்டுகிறார்கள். குறிப்பாக தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்க புகைப்பழக்கம் ஒரு பக்கபலம் என்று நினைப்பவர்கள் அதிகம். இன்னும் சிலர் காலையில் இது இருந்தால்தான் மற்ற கடமைகள் என்கிறார்கள். இவையெல்லாம் மனதளவில் ஏற்படும் மாயை என்பதில் இவர்களுக்கே சந்தேகமில்லை. இவர்கள் தெரிந்து கொண்டே தங்களை அழிவின் பக்கம் தங்களை நகர்த்துகிறார்கள்.
நான் செயின் ஸ்மோக்கர் என்றும் நாளொன்றுக்கு எனக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்று சிலர் பெருமையாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ நான் நினைத்தால் இப்பழக்கத்தை இன்றே நிறுத்திவிடுவேன், நான் ஒன்றும் இதற்கு அடிமையல்ல ஏதோ ஓய்வு நேரத்தில் மன ஆறுதலுக்கு புகைக்கின்றேன் என்கிறார்கள். உண்மையில் இவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமைகளே.
இது போன்ற புகைப்பழக்கத்திற்கு பலர் அடிமையாவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர்கள் யார் என ஆராய்ந்தால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை என்று கூறலாம். புகைபிடிப்பதால் உற்சாகமாய் சண்டையிடும் காட்சிகள், புகைப்பிடிப்பதைக் கண்டு காதல் வயப்படும் பெண்கள், சோக மற்றும் சந்தோஷ சந்தர்ப்பங்களில் புகைப்பிடித்தல் சம்மந்தப்பட்ட காட்சிகள் போன்றவை சின்னத்திரையும் வெள்ளித்திரையும் தவறாமல் இடைச்செருகல் செய்ததன் விளைவு 15 முதல் 19 வயது வரையுள்ளவர்களின் மனதில் புகைப்பழக்கம் ஒரு சிறந்த பழக்கம் என்ற தாக்கத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது.
இதனால் ஆரம்பத்தில் ஜாலிக்காக ஆரம்பிக்கின்ற ஒருவர் காலப்போக்கில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இப்பழக்கத்திற்காக ஒரு தொகையை தினமும் செலவழிக்கின்றார். இப்பழக்கம் சற்று அதிகமாகி போதைப் பொருட்களைத் தேட ஆரம்பிக்கின்ற சிலரும் உண்டு. சமீப காலங்களாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிகமாக கைது செய்யப்படுகின்ற இடம் கல்லூரி வாசல்களாகவே இருக்கின்றன. இனியாவது தணிக்கைத்துறை சினிமாவில் இது போன்ற காட்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்யது வருங்கால இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக வளர வழி வகுக்கட்டும்.
இத்தீய புகைபழக்கத்தின் காரணமாக தான்மட்டும் தீமையைத் தேடிக்கொள்ளாமல் 'யான் பெற்ற இன்பம்(?!) பெறட்டும் இவ் வையம்' என்பதற்கினங்க அருகில் இருப்பவருக்கும் அதைப் பகிர்ந்தளிக்கிறான். இதைத் தடுக்க தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள், பேருந்துகள், வணக்கத்தலங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில், புகைத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்திருக்கிறது. எனினும் இந்த அரசுகள் சிகரெட் விற்பனைக்குத் தடைவிதிக்க முன்வராததன் நோக்கம் என்னவென்று பார்த்தால் அரசு கஜானாவை அதிகமாக நிரப்புவதில் புகையிலைச் சுங்கவரி பெரும்பங்களிப்பதே ஆகும்.
விற்பனைக்குத் தடைவிதித்தால் அதன் உற்பத்தியாளர்களும், விற்பனைதாரர்களும் மற்றும் அதையே தொழிலாக மேற்கொண்டு வாழ்வை நடத்திவரும் மக்களும் சாலைமறியல், உன்ணாநோன்பு போன்ற போராட்டங்களில் இறங்குகிறார்கள். வீர வசனங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடும் அரசியல் வாதிகள் உயிர்களை அழிக்கும் இத்தொழிலை முடக்கி ஆக்கப்பூர்வமான பல தொழிற் சாலைகள் திறக்க முன் வருவார்களா?

கருத்துக்களும் ஆய்வுகளும்உலக சுகாதார மையம் (World Helth Organization) கருத்தாய்வு ஒன்று கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது, தற்போது உலகத்தில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் மக்கள் இக்கொடிய கேன்ஸர் நோயால் இறக்கின்றனர். இது வருங்காலத்தில் கி.பி. 2025 வாக்கில் 10 மில்லியனாக மாறலாம். இக்கொடிய நோயுக்கு முதல்காரணமே புகைப்பழக்கம் தான் என்கிறது.

2050-ஆம் ஆண்டு வாக்கில் எய்ட்ஸின் மூலம் எவ்வளவு மக்கள் இறக்க நேரிடுமோ அதேபோன்று இந்த கேன்ஸர் மூலமும் இறக்க நேரிடும் என்கிறார்கள். தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக சுகாதார மையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கும் விஷயம் தற்போது மட்டும் உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிய நாடுகளானது புகையிலை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகுக்கின்றன.

புகைப்பிடித்தல் விளைவாக ஏற்படும் இதய நோய்களால் ஆண்டுதோறும் 600,000-க்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் மட்டும் மரணிக்கின்றனர். வருடத்திற்கு 150,000 பேர் நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறார்கள்.
சீனாவில் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் 70 சதவீதம் ஆண்கள் புகைபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். சீனாவில் சுமார் 30 வயதுகளில் இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் புகைபிடிப்பதால் ஏற்படும் கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவராகவே உள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் புகைபிடிக்கும் ஆண்களைப் போன்று பாதியளவு பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். தாய்லாந்தில் இருக்கும் 80 சதவித புகைபிடிப்பவர்கள் தங்கள் 20 வயதுக்கு முன்பே இப்பழக்கத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.
பெருவாரியான நகரங்களில் புற்றுநோய் மையங்கள் பரவலாகத் தோன்றுவதற்குக் காரணம் கேன்ஸர் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரிப்பதேயாகும். யார் ஒருவர் நாளொன்றுக்கு 15 முறைக்கும் மேல் புகைக்கின்றாரோ அவர் பிற்காலத்தில் இதுபோன்ற புற்று நோய் மையத்தில் நோயாளியாக சேர்க்கப்படுவார், என மருத்துவ வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கேன்சரின் ஒருவகை பாதிப்பைத்தான் கீழ்கண்ட படத்தில் பார்க்கிறீர்கள்.

பி.பி.ஸி செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது, இங்கிலாந்தில் புகைப்பிடிக்கும் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்மையிழந்தவர்களின் எண்ணிக்கை 120,000. பெரும்பாலானோர் இதை அறியாமலே செய்கிறார்கள். மேலும் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலேயே பிறக்க நேரிடுகின்றன.
புகைப்பழக்கமும் ஆரோக்கியத்தின் பாதிப்பும்புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு பல எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றது. இதயம் பாதிப்பு, புற்று நோய், நுரையீரல், முகத்தோல் சுருக்கம், குடலில் ஏற்படும் அல்சர், பற்களில் பாக்டீரியாக்களின் தாக்குதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு, ஆண்மையிழப்பு, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு புகைப்பழக்கம் காரணியாக அமைகிறது.மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை எந்த ஓய்வும் எடுக்காமல் இடைவிடாது வரையறுக்கப்பட்ட விதத்தில் அனிச்சையாக இயங்குகின்ற உறுப்புகள் எனப் பார்த்தால் நுரையீரல் மற்றும் இதயம். புகைப்பழக்கத்தின் மூலம் முதலில் பாதிப்புக்குள்ளாவதும் இவையேதான்.

நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)
புகைபிடித்தலினால் முதலில் பாதிப்படையும் பகுதி நுரையீரல் தான். காற்றை உள்ளிழுப்பதால் நுரையீரல் விரிந்தும், வெளியிடுவதால் சுருங்கியும் செயல்படுகிறது. ஆக்ஸிஜனை கிரகித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது. புகைபிடிப்பதால் காற்றுடன் சேர்ந்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மோனாக்ஸைடு துகள்கள் நுரையீரல் பகுதியில் படிந்து கட்டிகளாக மாறுகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு காசநோய் (Tuber Classes) ஏற்படுகிறது. காலப்போக்கில் நுரையீரல் ஜவ்வுகளில் சிறிய துளைகளை இக்கட்டிகள் ஏற்படுத்துகின்றன. ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் சிறிய பைகளில் துளைகள் ஏற்படுத்தும் இந்நோயை (Pulmonary Emphysema) என்று அழைக்கின்றனர். இந்நோயிற்கான அறிகுறிகள் உடல் இளைத்தல், தூக்கமின்மை, காசம், வாழ்வில் தன்னம்பிக்கை இழைத்தல் ஆகியவை என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.
இரத்தப் புற்றுநோய் (Blood Cancer)நுரையீரலுக்குள் வரும் காற்றுதான் இதயத்திற்குச் சென்று ரத்தத்தைச் சுத்தம் செய்து ஆரிக்கிள்ஸ், வெண்ட்ரிகிள்ஸ் மூலமாக சுத்த இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பம்ப் செய்கிறது. புகைப்பதினால் ஆக்ஸிஜனோடு கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவை சுத்தமான ரத்தத்தோடு கலக்க நேரிடுகிறது. இதன் விளைவு இதயத்துடிப்பு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகரிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை விட கார்பன் மோனாக்ஸைடின் விஷத்தன்மை அதிகமாகும். புகைபிடிப்பதால் இந்த விஷவாயுவானது நுரையீரல் மூலமாக இரத்தத்தில் கலக்கிறது. இது ஆக்ஸிஜன் பரவுவதைவிட அதி விரைவாக இரத்த நாளங்கள் மூலமாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது. ஆக்ஸிஜனின் அடர்த்தியை விட கார்பன் மோனாக்ஸைடின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இரத்தத்திலுள்ள செல்களைச் சுற்றி இது படர்கிறது. இது போன்ற பாதிக்கப்பட்ட செல்கள் பிளவுபட்டு பிளவுபட்டு கட்டிகளாக உருவாகிறது. இக்கட்டிகளை முற்றிலுமாக அறுவை சிகிச்சைகள் மூலம் நீக்குவது மிகவும் சிரமமான ஒன்று. நவீன கதிர்வீச்சு முறையில் இதை அழித்தல் என்பது அதிகப்படியான செலவுகளுக்கு வழிவகுக்கும்.
எலும்புருக்கி நோய் - லூக்கேமியா (Leukemia) மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் சுமார் 7,000 முதல் 25,000 வரை இரத்த வெள்ளையணுக்கள் அடங்கியுள்ளன. இந்த வெள்ளையணுக்களின் மிக முக்கியமான செயல் நோயை எதிர்ப்பதுதான். மனித உடலில் இதன் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே. இரத்த சுழற்சியின் காரணமாக இவை புதிப்பித்துக் கொண்டே இருக்கும். புகைபிடித்தலின் மூலமாக பாதிக்கப்படுகின்ற இவ்வகைச் செல்கள் எலும்புகளின் ஓரங்களின் தங்கி பிளவுபட்டு கட்டிகளை உருவாக்கின்றன. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் 50,000 வரை உள்ளன. இவை எலும்புகளின் வலுத்தன்மையை இழக்கச் செய்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கின்றன. இதனால் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே மரணத்தை முத்தமிட்டு விடுகிறார்கள்.
குடல் நோய்கள் (Stomach Ulcers)
உள்ளிழுக்கின்ற புகையில் கலந்திருக்கின்ற மோனாக்ஸைடு மற்றும் நிக்கோடின் துகள்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து குடல் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. இது குடலில் ஜீரணிப்பதற்காக சுரக்கின்ற என்ஸைம்களுடன் இணைந்து அதன் இயற்க்கைத் தன்மையை மாறச் செய்கின்றது. இதனால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி குடலுறிஞ்சிகளை அழிக்கின்றன. இதனால் குடல் பாதிப்படைகிறது. சில சமயம் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல் வளர்ச்சிக்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் படபடப்புத்தன்மை (Hyper Tension)
ஆரோக்கியமான ஒவ்வொறு மனிதனின் உடலிலும் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தின் பருப்பொருளாக ஹீமோகுளோபின், பிளாஸ்மா, குளுக்கோஸ், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் மற்றும் இதர பொருட்கள் இருக்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம் ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிக்கும் இரத்தம் சுழன்று உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. இவ்வாறு இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும். புகைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு கூடுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தமும் படபடப்புத்தன்மையும் ஏற்படுகிறது.தசைச் சுருக்கம்இரத்தத்தில் இது போன்று ஆக்ஸிஜன் குறைந்து கார்பனின் அளவு கூடும் போது தோலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் புரோட்டீனின் அளவு குறைகிறது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. விளைவு கண்களைச் சுற்றிலும் உள்ள மெல்லிய தசைகளிலும் மற்றும் கன்னங்கள், உதடுகளின் தோல் சுருங்கி வரிகள் போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர்களின் முகம் எப்பொழுதும் வரண்ட நிலையிலேயே காணப்படும். இதனால் வயது முதிர்ந்தவர்கள் தோற்றத்தை மிகவும் விரைவிலேயே பெற்று விடுகிறார்கள்.

பற்கள் பாதிப்பு மற்றும் வாயில் ஏற்படும் அலர்ஜிபுகையை உள்ளிழுத்து வெளியிடுவததால் இவர்களின் உதடுகளின் தோல்களின் மெலேனியம் பாதிப்படைந்து கருக்கின்றன. பற்களின் உள்ளும் புறமும் நிக்கோடின் படிவதால் பற்கள் மஞ்சள் நிறமடைந்து விகாரமாகின்றன. காலப்போக்கில் பற்களின் நிறம் நிரந்தரமாக கருப்பாக மாறுகிறது. மேலும் நிக்கோடின் படிவதால் பற்களில் உள்ள கால்சியம் குறைகிறது, பற்களின் ஈறுகளில் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களின் வலுத்தன்மையை இழக்க வைக்கின்றன.
மேலும் இத் தீய பழக்கம் மண்ணீரல், கல்லீரல், நரம்புத்தளர்ச்சி, கடுங் குளிர்காய்ச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியமாக அமைகிறது.
வீண் விரையம்புகை பிடிக்கின்ற ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு எவ்வளவு பொருட்செலவு செய்கிறார்கள். மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு எவ்வளவு வீண்விரையம் செய்கிறார்கள் என ஒரு நிமிடம் தாங்களே கணக்கிட்டுப்பார்த்தால் அவர்களே வியக்கும் வகையில் வீண்விரையம் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சராசரியாக 30 வருடம் புகைப்பிடிக்கும் மனிதர்கள் தனது வாழ்வில் கீழ்கண்டவாறு சிகரெட்டிற்கு செலவழித்திருக்கிறார்கள்.

சராசரியாக புகைத்தஆண்டுகள்
சராசரியாக 1 நாளைக்குபுகைபிடிக்க ஆன செலவு
மொத்தம் கரியாக்கியரூபாயின் மதிப்பு
30 ஆண்டுகள்
10 ரூபாய்
1,09,800.00 ரூபாய்
30 ஆண்டுகள்
25 ரூபாய்
2,74,500.00 ரூபாய்
30 ஆண்டுகள்
50 ரூபாய்
5,49,000.00 ரூபாய்
இதுவல்லாமல் புகைத்ததால் வந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க செலவழிக்கும் ரூபாய்கள் மேற்குறிப்பிட்ட லட்சங்களைத் தாண்டிவிடும்.
எனவே நீங்கள் இதற்காகச் செலவழிக்கும் பணத்தை உங்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாமே. தர்மம் செய்தால் கூட மறுமையில் ஒன்றுக்கு பல மடங்காகப் பெறலாம் என்பது உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?
சிந்தித்து நல்லறிவு பெரும் மக்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையே போதுமானதாகும். அன்புச் சகோதரர்களே இத்தீய பழக்கத்திலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
மேலும் கூறுகின்றான்எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம் அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் 4:30)

நன்றி : இஸ்லாம்கல்வி.கம்

தொழுகை - கடமையும் சிறப்பும்

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.
1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,
2- தொழுகையை நிலை நாட்டுவது
3- ரமளான் மாதம் நோன்பு நோற்பது
4- ஹஜ் செய்வது
5- ஜகாத் கொடுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ் சுமார் 80 இடங்களில் அல்குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதில் சில வசனங்களையும் தொழுகையைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் சிலவற்றையும் தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றிபெறும் தொழுகையாளிகளாக ஆக்கியருள்வானாக! 1- தொழுகைக் கடமைநிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20:14) அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும் தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும் ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட "தொழுகை! தொழுகை!" என கூறிக் கொண்டிருந்தார்கள்.(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் : இப்னுமாஜா)குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்து விட்டால் அடித்தாவது தொழ வையுங்கள்! என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : அபுதாவூத்) 2- போர்க்களத்திலும் தொழுகை
(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:239)3- உரிய நேரத்தில் தொழவேண்டும்நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2:238)4- மானக்கேடை விட்டும் விலகிட
தொழுகையை நிலை நிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)5- தொழுகையாளியே வெற்றியாளர்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் 23.1-2)தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (அல்குர்ஆன் 87:14-15)பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)6- சுவனத்தின் வாரிசுதாரர்
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)யார் தொழுகையை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் இருக்கும். யார் அதை பேணிக்கொள்ள வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மாறாக 'அவர் மறுமை நாளில் -காஃபிர்களாகிய- காருன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலப் ஆகியவர்களுடன் இருப்பார்', என நபி (ஸல்) எச்சரித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்: அஹ்மத்)மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூல் : இப்னுமாஜா)காலையிலோ, மாலையிலோ பள்ளிவாயிலுக்குச் செல்பவருக்காக - அவர் காலையிலும், மாலையிலும் செல்லும் போதெல்லாம் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு தங்குமிடத்தை அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)சூடு தனிந்த நேரத்திலுள்ள (ஃபஜ்ர் மற்றும் அஸர் ஆகிய) இரு தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளுச் செய்து, பிறகு முகம் மற்றும் மன ஈடுபாட்டுடன் இரண்டு ரகஅத்கள் தொழுவாரானால் அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் -ரலி, நூல் : முஸ்லிம் )7- வேண்டாம், நரகக் கேடு
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள் (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். (அல்குர்ஆன் 107:4-5)8- மறுமை நாளில் முதல் விசாரணை!மறுமையில் (செயல்களை குறித்து) முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபுஹுரைரா-ரலி, நூல் : அபுதாவூத்)9- நீங்கள் முஸ்லிம்கள்தானா?
அடியானுக்கும் இணைவைத்தலுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்)நமக்கும் (இறைநிராகரிப்பாளராகிய) அவர்களுக்கும் மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். (நூற்கள் : நஸயீ, திர்மிதீ, அபுதாவூத்); 10- பிரார்த்தனை
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ، رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ.
ரப்பிஜ்அல்னீ முகீமஸ் ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் துஆ. ரப்பனஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்.(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (அல்குர்ஆன் 14:40)
صلى الله وسلم على محمد وعلى آله وصحبه والحمد لله رب العالمين
நன்றி : இஸ்லாம் கல்வி. கம்